“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கவனமுடன் வார்த்தைகளை கையாள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X தள பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

“யாரிடம் எப்படி பேச வேண்டும் என  பெரியார் – அண்ணா – கருணாநிதி – திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கருணாநிதியைப் போல – சிலரிடம் திமுக தலைவரைப் போல பேசுகிறோம்.

எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக திமுக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மத்திய அமைச்சரின் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மத்திய நிதி அமைச்சர் அவர்களே!”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1738208522750546086?t=XzMlHaTPrNjmDtt3JO9R4Q&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.