”தைரியமா இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்” என வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 14.5 அடி உயர திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
இதனையடுத்து நாகர்கோவில் அருகே உள்ள காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த தொழிற்சாலையில் ஏறத்தாழ 147 வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இதனையும் படியுங்கள்: ஆட்சியை அகற்ற சதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
வட மாநில தொழிலாளர்களிடம் தொழிற்சாலையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்த கேட்ட முதல்வர் தைரியமாக இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார். தொழிற்சாலைகளில் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு மற்றும் உரிய சம்பளம் வழங்கப்படுகின்றனவா என அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் முதலமைச்சரோடு தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டு சென்றார்.
– யாழன்







