அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு (sky view ward) என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஜூன் 21ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை துவங்கி நடைபெற்றது.

செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து 4 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில் “ அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் “ என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக 7 வது தளத்தில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி 4 வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அறை எண் 435 க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் தனி அறையில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் அவரின் உடல் நலம தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.