மேலும் மார்ச் 28-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (மார்ச் 26) பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் மெகா பேரணிக்கும், முற்றுகைப் போராட்டத்திற்கும் டெல்லி காவல்துறை அனுமதியளிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் பதவியில் தொடரக் கூடாது என டெல்லி ஐடியு பகுதியில் பாஜகவின் டெல்லி மாநிலத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி குவிந்த பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் பாஜகவினர் மீது தண்ணீர் அடித்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.








