சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். சிபிஐ விசாரணைக்கு அனுமதிப்பதில் என்னதான் பிரச்னை? சில மாநிலங்கள் சிபிஐக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அதன் பின்னணி என்ன? அரசியலா? அத்துமீறலா? தவறாக பயன்படுத்தப்படுவதா என்பதைப் பார்ப்போம்…
ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அண்மையில் பீகார் தலைநகர் பாட்னா சென்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜாஸ்வி யாதவைச் சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பி இருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளைக் கையாள சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களும் சிபிஐ விசாரணைக்கு அளித்துள்ள ஒப்புதலை திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் வலியுறுத்தினார்.
ஆம் ஆத்மியின் அச்சமும் போராட்டமும்
ஆம் ஆத்மி கட்சியும், ஆபரேஷன் தாமரை (Operation Lotus) என்று டெல்லியில் தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகக் குற்றம் சாட்டி வருவதோடு, டெல்லியில் சிபிஐ தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. ஆபரேஷன் தாமரை மூலம் ஏற்கனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி கலைப்பும், குலைப்பும் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக் கலைப்புக்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க தலா 20 கோடி ரூபாய் வீதம் 277 எம்எல்ஏக்களை வாங்க, 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பாஜக செலவிட்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் கோரிக்கையை சிபிஐ ஏற்றுள்ளது.
சிபிஐக்கான ஒப்புதலை திரும்பப் பெற்ற மாநிலங்கள்
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி வரும் பல்வேறு மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்காக வழங்கப்பட்ட பொது ஒப்புதலை (General Consent) திரும்பப் பெற்றுள்ளன.
இதுவரை மிசோரம், மேற்கு வங்கம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், மேகாலயா உள்ளிட்ட 9 மாநிலங்கள் அனுமதியைத் திரும்பப் பெற்றுள்ளன.
இதில் 2015ஆம் ஆண்டு மிசோரம் மாநிலம் தான், சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்தது. அப்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பின்னர் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக சிபிஐக்கான அனுமதியை வாபஸ் பெறத் தொடங்கின. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வேண்டிய 150க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்திலேயே சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஒப்புதல் (General Consent) என்றால் என்ன?
தேசிய புலனாய்வு முகமை (NIA) சட்டம் 2008ன் படி, அந்த அமைப்புக்கு நாடு முழுவதும் விசாரிக்கக் கூடிய அதிகார வரம்பு உள்ளது. ஆனால் டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் (DSPE), 1946ன் கீழ் வரும் சிபிஐ அமைப்பானது,
ஒவ்வொரு மாநிலத்திலும் குற்ற விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றால், அந்த மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும்
என்பது சட்டமாகும். அந்த ஒப்புதல் என்பது ஒவ்வொரு வழக்கிற்கும் என்று இருக்கலாம் அல்லது பொதுவான ஒப்புதலாகவும் இருக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது தான் பிரச்னையா?
சிபிஐ விசாரணைக்கான அனுமதி வாபஸ் என்பது அண்மைக்காலமாக தீவிரமாக இருந்தாலும், இது இப்போதைய பிரச்னை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், சிக்கிம், நாகாலாந்து, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிபிஐக்கான ஒப்புதலை ரத்து செய்திருக்கின்றன.
பின்னர் மீண்டும் ஒப்புதல் அளித்திருக்கின்றன. குறிப்பாக 1998ல் கர்நாடக முதலமைச்சராக ஜே.எச். பாட்டில் இருந்த போது, சிபிஐக்கான அனுமதியை ரத்து செய்தார். 1999ல் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று, எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சரானவுடன் சிபிஐக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
எஜமான விசுவாசியா சிபிஐ?
பாஜகவோ, காங்கிரசோ எந்த கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் குற்றம் சாட்டுவது தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. தன்னிச்சையான அமைப்பாக சிபிஐ இருந்தாலும், அதன் மீதான இந்த கறை போக்க முடியாததாகவே இருந்து வருகிறது.
2018ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1988ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, பிரிவு 17Aன் கீழ், எந்த அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
அதற்கு முன்னர் உயரதிகாரிகள் அளவிலேயே மத்திய அரசின் அனுமதி தேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிக்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து பார்க்கும் போது, சிபிஐ-யின் எஜமான விசுவாசம் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று சொல்ல முடியாது என்றும் அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இவற்றை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எந்த கட்சியும் எடுப்பதில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
புதிதாக சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியுமா?
கொல்கத்தா உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐ எந்த ஒரு மாநிலத்திலும் புதிதாக வழக்கு பதிவு செய்யலாம். அதே போல் டெல்லியில் வழக்கு பதிந்து, அது தொடர்புடைய வழக்கில், எந்த மாநிலத்திலும் உள்ளவர்கள் மீது விசாரணை நடத்தலாம். என்றாலும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் எந்த ஒரு மாநிலத்திலும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடலாம்.
பீகாரில் என்ன பிரச்னை?
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், திடீரென அதனை முறித்துக்கொண்டு லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் நீடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் மீது நில ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இதன் காரணமாக சிபிஐக்கான ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த மாநிலத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. என்றாலும் ஏற்கனவே பதிந்த வழக்குகளில் இருந்தும், விசாரணையில் இருந்தும் அவர்களால் தப்ப முடியாது.
அரசியல் பழிவாங்கக் பயன்படுத்தப்படுகிறதா சிபிஐ?
சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்த மாநில அரசுகள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீதே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டி வருகின்றன. பீகார் மாநில அரசும் அனுமதியை வாபஸ் பெறக் கூடும் என்று கருதப்படும் சூழலில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும்,
எதிர்க்கட்சிகள் மீதான பிம்பத்தை சீர்குலைக்க மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பயன்படுத்தி வருவதாகக்
குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மக்கள் இதனை பார்த்துக்கொண்டிருப்பதாகவும், தகுந்த பதிலடியை தகுந்த நேரத்தில் வழங்குவார்கள் என்றும் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஊழலை பாதுகாக்க நிதிஷ் முனைவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்த கால கட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையிலும் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஒவ்வொரு நாளும் அந்த தலைவர்கள் விசாரணைக்கு சென்ற போதெல்லாம் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முடிவுக்கு வருமா?
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வெளிப்படையான தூய்மையான நடவடிக்கைகளே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். மாநில அரசுகள் லஞ்ச ஒழிப்புத்துறையையும், மத்திய அரசு மேற்கண்ட மூன்று அமைப்புகளையும் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தால் மட்டுமே இந்த பிரச்னை முடிவுக்கு வரும்.
– ஜெயகார்த்தி
Twitter ID: https://twitter.com/jayakaarthi