சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்துவதாக கடந்த டிச.10-ஆம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதயகுமாரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த அக்பர் அலி என்பவரை கைது செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து உதயகுமார் மற்றும் அக்பர் அலி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் மத்திய போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணயில், மணிப்பூரில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு 56 கிலோ போதைப் பொருள் கடத்தப்பட்டு வந்தது அம்பலமானது.
இதையும் படியுங்கள்: உதகையில் கடும் பனிப்பொழிவு – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
ஏற்கனவே கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறையில் இருந்த அக்பர் அலி மீண்டும் கடத்தலில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கிலோ, இரண்டு கிலோ என போதைப் பொருளை தனித் தனியாக பிரித்து ராமநாதபுரம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கடல் மற்றும் விமான வழிகள் வாயிலாக நூதன முறையில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது.
மேலும் பெயிண்ட் டப்பாக்களில் சந்தேகம் வராதபடி போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டதும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் மூலமாக கடத்தல் நடைபெற்று வந்ததாகவும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போதை பொருள் கடத்தப்பட்டதில் தீவிரவாத தொடர்பு உள்ளதா என என்ஐஏ அமைப்பு விசாரிக்க உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த உதயகுமார் குறித்து தகவல் கேட்டு இலங்கை தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
போதைப் பொருள் கடத்தினால் கிடைக்கப்படும் பணத்தை பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட பயன்படுத்தப்படுகிறதா என விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டவர்களையும் அவர்களுக்கு வந்த சர்வதேச தொடர்புகளையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வு செய்து வருகிறது.