35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..


விக்னேஷ்

கட்டுரையாளர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன.

கூட்டணி பேச்சுவார்த்தை, அணிகள் பிளவு, தனித்துப் போட்டி, தேர்தலில் இருந்து விலகல் என அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக என நான்குமுனை போட்டி நிலவுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக 30 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக நிவாரணமாக இரட்டை இலை கிடைத்துள்ளது. கொங்கு மண்டலம் என்பதாலும், அதிமுகவில்
ஒற்றைத் தலைமை தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் தன் செல்வாக்க நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் முழுவீச்சில் இறங்கியுள்ளார் . அவருக்கு துணையாக கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என ஒரு படையே களமிறங்கியுள்ளது. இது தவிர மூன்றாவதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக சீமானும், தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா, சுதீஷ் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வீதி வீதியாக என்றில்லாமல், வீடு வீடாகவும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கிடைக்க போகிறது என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தன் தரப்பு வேட்பாளரை திரும்ப பெறுவதாக முன்கூட்டியே அறிவித்தார். ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த அண்ணாமலையும் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அதோடு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்திற்கு செல்வதாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிடமிருந்து எந்தவித ஆதரவு சமிஞ்கையும் வரவில்லை. மாறாக ஓ.பி.எஸ் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார், திமுகவின் ஆதரவாளராக மாறிவிட்டார் என்ற விமர்சனங்களே வந்தன.

இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓரிரு தினங்களுக்கு முன்பு கூட்டினார். அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கட்சியையும் சின்னத்தையும் மீட்க இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கிவிட்டதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்குமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதோடு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படியே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறிய ஓ.பி.எஸ் ஓரிரு மாதங்களில் முழு கட்சியும் நம்மிடம் தான் இருக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். கூடுதலாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால் மட்டுமல்ல கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டால் கூட அதிமுக முழுமையாக அவரின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்பதால் ஈரோடு கிழக்கில் தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் அதாவது யாரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதையும் சூசகமாக சொல்லியுள்ளார் ஓ.பி.எஸ்… தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்தில், ஈரோடு கிழக்கில் இரட்டை இலை வெற்றி பெறாது என தொண்டர்கள் கருதுகிறார்கள் என இடம்பெற்றிருக்கும் வரிகளை உற்று கவனித்தால் ஓ.பி.எஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆதரவாளர்கள் நீக்கம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அசூர பலத்துடன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எதிர்பாராத தீர்ப்பு வரும்பட்சத்தில் மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்ற மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடையும் சத்தமில்லாமல் தயார் செய்து கொண்டிருக்கும் ஓ.பி.எஸ், மாவட்ட வாரியாக சென்று அதிமுக தொண்டர்களையும் சந்திக்கவும் தயாராகி கொண்டிருக்கிறார்.

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் பிரிவு ஒட்ட முடியாத உடைந்து போன கண்ணாடி தான் என்றாலும் கடந்த முறை இருவரையும் இணைத்து வைத்த டெல்லி இந்த முறை அதற்கான முயற்சியை எள் அளவும் எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் எழக்கூடிய பிரதான சந்தேகம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading