ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளி மாணவர்களுக்கு சாதிப் பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “பள்ளி மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் வருவாய் துறை சார்ந்த சேவைகளைப் பெறும் நோக்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இ-சேவை மையங்கள் மூலமாக இச்சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் தொடர்பாக சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான சமூகச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படும். ஆனால், மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளிக் கல்வித் துறையின் பரிசீலனை மற்றும் முடிவிற்கு உட்பட்டவையாகும். மேலும், மாணவர் அடையாள அட்டையில் இடம் பெற உள்ள விவரங்கள் குறித்து தற்போது துறைகளுக்கிடையேயான ஆலோசனை நடைபெற்று வருகின்றன.
அத்துடன், மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் இரத்த வகை போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறவும், பிற விவரங்கள் தேவைக்கேற்ப பாதுகாப்பான QR குறியீட்டு (QR Code) வடிவில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பான அனைத்து அம்சங்களும் சம்பந்தப்பட்ட துறைகளின் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும். எனவே, சமூக விவரங்கள் மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “பள்ளி அடையாள அட்டையில் சாதி பெயர் குறிப்பிடப்படாது; அடையாள அட்டை விவகாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.




