நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராகக் களம் காண்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
எதிர்க்கட்சியான அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூசாரி சென்னிமலை வீதியில் தேர்தல் பணிமனையை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.