“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த பிறகு நேற்று இரவு முதல் மழையின் தீவிரம் குறைந்தது.  இன்று காலையில் இருந்து வெயிலும் தலை காட்டத்தொடங்கியதால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.  மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 சதவிகித இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரெயில் சேவை தொடர்ந்து தடையின்றி இயங்கி வருகிறது.  சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.  சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவிகித தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 411 முகம்களில் 32,158 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  30 படகுகள் மீட்புபணிகளில் களத்தில் உள்ளன.  3,000 களப்பணியாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். மேலும் 2000 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  180 பேர் தற்போது வரை மீடிக்கப்பட்டுள்ளனர்.  85 கால்நடை உயிரினங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.  338 மரங்கள் விழுந்துள்ளன,  அதில் 147 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.