அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய திருமாவளவன், பிரபாகர ராஜாவை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாஜக, மத அரசியலை நடத்தி வருகிறது என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, மோடியா இந்த லேடியா என்று கூறி பாஜகவை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்தார் எனவும் அவர் கூறினார். ஆனால் தற்போது இருக்கும் முதலமைச்சர் அதிமுக ஆட்சியை நடத்தவில்லை, பாஜக ஆட்சியைதான் நடத்தி வருகிறார் என்ற குற்றம்சாட்டினார்.







