கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுவதால் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. அந்த வகையில், ராமநாதபுரம், பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல், இலுப்பூர், மங்கைநல்லூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. திடீரென பெய்த மழையால் குருவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
புதுச்சேரி கடற்கரை, உப்பளம், ராஜ்பவன், உருளையான்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடியுடன் கூடிய மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.
- பி.ஜேம்ஸ் லிசா