புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்
பழமையான சிவாலயம் ஆகும். 1305ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் காலத்தில் சோழ
மன்னர்களாலும் பாண்டிய மன்னர்களாலும் இணைந்து கட்டப்பட்டதாக இந்த கோவிலின்
கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிஷேக விழாவாக வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இதனையும் படியுங்கள்: பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
இந்நிலையில் திருக்கோவில் நிர்வாகத்தினர் ஆலங்குடியில் உள்ள அனைத்து மக்களும்
ஜாதி மத வேறுபாடு இன்றி கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இப்பகுதி திகழ வேண்டும் என்று திட்டமிட்டனர்.
அதன்படி ஆலங்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியர்கள் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று கிறிஸ்தவர்களுக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கி மரியாதை செய்தனர். மேலும் ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சிறப்பு அழைப்பு கொடுத்தனர்.
– யாழன்







