புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
- இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
- அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

- கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.
- கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
- புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- அவசர உதவி எண்கள்:
1. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070
2. வாட்ஸ் அப் எண். – 94458 69848 மாவட்ட
3. அவரகால செயல்பாட்டு மையம் 1077
இவ்வாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.







