ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கம் சொல்வதற்கு நன்றாக இருக்கும், ஆனால் அதனை செயல்படுத்துவது மிகவும் கடினம் என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
” ஜி.எஸ்.டி கவுன்சிலின் 49வது கூட்டம் மதுரையில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேதியில் மதுரையில் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால் இந்த கூட்டத்தை டெல்லியிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அதனடிப்படையில் டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதனையும் படியுங்கள் : இந்தியா வந்தடைந்த 12 சிறுத்தைகள் – குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பு
ஆடிட் அறிக்கையின் அடிப்படையில் 2020 -21ம் ஆண்டுக்கான 4230 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. அந்த தீர்ப்பாயத்துக்கு மாநிலத்தின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதனடிப்படையில் பல்வேறு திருத்தம் செய்ய வலியுறுத்தி உள்ளோம்.
மேலும் மாநில அளவில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் வலியுறுத்தினோம். ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கம் சொல்வதற்கு நன்றாக இருக்கும், ஆனால் அதனை செயல்படுத்துவது மிகவும் கடினம்.
ஜி.எஸ்டி இழப்பு நீட்டிப்பு தொடர்பான விவகாரத்தை இதுவரை மத்திய அரசின் தரப்பு தெரிவிக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தின்படி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தால், ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாகவும் இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமே தவிர தனியாக விவாதிக்கப்படும் என்று கூறக்கூடாது.
அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில்தான் நடைபெறும், அப்போது ஜி.எஸ்.டி தொடர்பாக தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய நிதியமைச்சர், மத்திய நிதி செயலாளர் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளரிடம் வழங்க இருக்கிறோம்” என பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
– யாழன்







