“பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும்” – மன்சூர் அலி கானுக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி!

நடிகை த்ரிஷாவிற்கு எதிராக நடிகர் மன்சூர் அலி கான் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில்,  பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

நடிகை த்ரிஷாவிற்கு எதிராக நடிகர் மன்சூர் அலி கான் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில்,  பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா,  மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது X தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் தெரிவித்தார்.  இதையடுத்து,  நடிகை,  நடிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும்,  நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

தமிழ் சினிமா வட்டரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரமானது,  நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.  எனினும் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா,  நடிகை குஷ்பூ,  நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய்  மான நஷ்டஈடு கேட்டு  நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இது குறித்து நீதிபதி கூறியதாவது:

“மன்சூர் அலி கான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.  நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில்,  பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா?

மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலி கான் கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா த்ரிஷாவிடம் நிபந்தனை அற்ற மன்னிப்புக்கோரினார்?”.

இவ்வாறு நீதிபதி என்.சதீஷ்குமார் தனது கருத்தை பதிவு செய்தார்.

மேலும் மன்சூர் அலி கானின் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை வரும் டிச. 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.