காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,…

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு
மாதங்களாக பனிப்பொழிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவி வரும் வெயிலின்
காரணமாக, செடி கொடிகள் கருகி வனப்பகுதிகள் முழுவதும் கடும் வறட்சி நிலவி
வருகிறது. இதனால் வனப்பகுதியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் குடியிருப்புகள், சாலையோரங்கள்
மற்றும் விளை நிலங்களில் உணவு , தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது
தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அதேபோல் இன்று, அல்லூர் வயல் பகுதியில் வசித்து வந்த கருப்பன் என்ற முதியவர் ,
தனது  சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அண்மைச் செய்தி :  குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த
வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி உயிரிழந்த
கருப்பனின் உடலை மீட்டனர். இந்நிலையில், தொடர்ந்து கிராம பகுதியில் காட்டு யானை
முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால், காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரி, கிராம மக்கள் உயிரிழந்த முதியவரின் உடலை சம்பவ இடத்திலேயே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு மாதத்தில் , கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி மூன்றாவது நபர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.