அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை 2001 பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம்
அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள
நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அதிமுக முன்னாள் எம்பி-யும்,
அமமுக பொதுச் செயலாளரருமான டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால், டிடிவி.
தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ்
அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல்
முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி
அமர்வு விசாரித்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ் விதி்க்கப்பட்ட 28 கோடி
ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும் அபராதத்தை
செலுத்தாததால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில்
நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. இது உரிமையியல் பிரச்சினை
கிடையாது என்று வாதிட்டிருந்தார்.
டிடிவி.தினகரன் சா்ரபில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், தினகரனுக்கு உள்ள
நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், இது
சட்ட ரீதியாக தவறு எனவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி
ஆகியோர், அபராதம் என்பது கடன் தான் என்று குறிப்பிட்டதுடன், அபராதத் தொகையை
செலுத்தாமல் இருக்கும்போது திவால் ஆனவர் என அறிவிக்கக் கோரி தாக்கல்
செய்யப்படும் மனு விசாரணைக்கு உகந்தது தான் என்றும், இந்த வழக்கை பொறுத்த வரை
அபராதம் விதித்த உத்தரவை இறுதி செய்து உத்தரவு பிறப்பிக்கும் முன்பே, திவால்
ஆனவர் என அறிவித்து பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது என உத்தரவிட்டனர்.
மேலும், அமலாக்கத் துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,
மீண்டும் நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அமலாக்கத்
துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.







