திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது, அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவங்கி வைத்தார். மேலும், இது தொடர்பான கண்காட்சி வைக்கப்பட்டு, அதனை மாணவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் தக்ஷிணாமூர்த்தி விளக்கம் அளித்தார்.
மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மாணவர்களிடையே கேள்விகளை எழுப்பி சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.