” ஜனநாயகத்தை காக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம் “ என வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் வேலூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி மற்றும் ஆ.ராசா எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“சிப்பாய் கலகத்தின் நினைவு தூணை வேலூரில் நிறுவியவர் முன்னாள் முதலமைச்சார் கருணாநிதி. மேலும் வேலூருக்கு பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
நானும், அமைச்சர் துரைமுருகனும் கருணாநிதியால் வளர்த்து எடுக்கப்பட்டவர்கள். நான் கால் சட்டை போட்ட காலத்திலிருந்து துரை முருகன் என்னை பார்த்திருக்கிறார். இன்று அவரோடு கட்சியில் திமுக தலைவராகவும், துரை முருகன் பொதுச் செயலாளராகவும் இருப்பது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்று. திமுக ஆரம்பிக்கபட்ட காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருக்கிறது. நான் தொண்டர்களால் திமுக தலைவராக்கப்பட்டவன் . 2 கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கூட்டம் திமுக. பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கை வழியில் திமுக செயல்படுகிறது. இதுவரை 6 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக மாற்றி வருகிறோம். வரிவருவாயை கபளீகரம் செய்து மாநில அரசின் செயல்பாட்டை மத்திய அரசு முடக்குகிறது. வசூலிக்கும் வரியை மத்திய அரசு முறையாக பிரித்துக் கொடுப்பது இல்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் நீட்டை கொண்டு வந்தார்கள்.
ராஜஸ்தானில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்திற்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனநாயகத்தை காக்க வேண்டிய மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி இன்று பலருக்கும் பொறாமையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைத்து தமிழக மக்களை அழிக்கும் வேலையைதான் பாஜக செய்கிறது.
2015ல் மதுரையில் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. பாஜகவின் ஊழல் முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாநிலத்தின் கல்வியை தடுக்க மத்திய அரசு பார்க்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.