நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் அதன் நிர்வாக இயக்குனர் கமலக் கண்ணனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையை தலைமையகமாக கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டில் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி பல கோடிக்கு முதலீடுகளை பலர் செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதன அடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நியோமேக்ஸ் ப்ராபரிட்டிஸ் இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென பொருளாதாரம் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் நிபந்தனைகளாக தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் சென்னையில் இருந்த நியோ மேக்ஸ் நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணனை கைது செய்தனர். மேலும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சிங்காரவேலனையும் கைது செய்தனர்
பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ஜோஸ் தங்கையா தலைமையிலான தனிப்படை காவல்துறை இருவரையும் கைது செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகிறது. நியோ மேக்ஸ் மற்றும் துணை நிறுவனங்கள் என 25 நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நியோமேக்ஸ் வழக்கில் இதுவரை 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி வழக்கில் 92 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 752 பேருடைய வங்கி கணக்கில் 15 கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







