கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரமாக சென்னை உள்ளது. சென்னையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி கொரோனா தொற்று, 1,500க்கும் கீழாக குறைந்துள்ளது.
இந்நிலையில், மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய பல்துறை வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மருத்துவர்கள், தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறையினர், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த சிறப்பு பணிக்குழுவில் இடம்பெற உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஓரிரு தினங்களில், சென்னை மாநகராட்சி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







