கோவில்பட்டியில் பரிகார பூஜை என்ற பெயரில் நூதன முறையில் தங்க நகைகளை திருடிய தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் மற்றும் அவரது மனைவி பேச்சியம்மாள். தங்களது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை எனக்கூறி அதனை சரி செய்யக்கோரி, திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் முத்துராமலிங்கம் என்பவரிடம் உதவி கோரினார். அப்போது தங்க நகையை வைத்து பூஜை செய்து, பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்னை தீர்ந்துவிடும் என்று முத்துராமலிங்கம் பேச்சியம்மாளிடம் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை நம்பிய பேச்சியம்மாள் அவருக்குச் சொந்தமான இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் அவரது சகோதரர் காசிராஜனின் நான்கரை பவுன் தங்க நகையை வைத்து பூஜை செய்ய சம்மதித்துள்ளார். பின்னர் மே மாதம் 7ஆம் தேதி இரவு, பேச்சியம்மாள் வீட்டில் வைத்து முத்துராமலிங்கம், நகைகளை ஒரு பாத்திரத்திரத்தில் மூடி வைத்து பரிகார பூஜை செய்துள்ளார். பூஜை முடிந்த பிறகு, இரு குடும்பத்தினரையும் வீட்டிற்கு வெளியே சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர்களை வீட்டிற்குள் அழைத்த முத்துராமலிங்கம், பாத்திரத்தை கொடுத்து அதனை அடுத்த 40 நாட்களுக்கு திறக்காமல் பூஜை அறையில் வைக்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அது பலன் தரும் என்று கூறியுள்ளார்.
பின்னர் ஜூன் 1ம் தேதியன்று மீண்டும் அய்யனார் வீட்டிற்கு அருகேயுள்ள மாரியம்மாளும் முத்துராமலிங்கத்தை அழைத்து வந்து அரை பவுன் தங்க நகையை வைத்து பூஜை செய்துள்ளார். அதன்பிறகு ஜூன் 7ம் தேதி மீண்டும் அய்யனாரை தொடர்புகொண்ட முத்துராமலிங்கம், வேறு யாருக்காவது பூஜை செய்ய வேண்டுமா என கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அய்யனார் பரிகார பூஜை செய்யப்பட்ட பாத்திரத்தை திறந்து பார்த்தார். அப்போது பாத்திரத்திரத்தில் நகைகள் இல்லை என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து, பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.