திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசிய எடப்பாடி பழனிசாமி, இரு பெரும் தலைவர்கள் இல்லாத இந்த சூழலில் மூத்த முன்னோடிகள் உழைத்து கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கிடைத்து முதல் மகிழ்ச்சி. தென்மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்டது இரண்டாவது மகிழ்ச்சி. அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஆனால் மற்ற கட்சி குடும்ப ஆட்சியை நடத்தும் கட்சியாகவும் , வாரிசு அரசியல் நடத்தும் கட்சியாகவும் இருந்து வருகிறது என திமுக குறித்து மறைமுக விமர்சனம் செய்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், இன்று வரை நாங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி – ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருமண விழா மேடையில் பேசிவிட்டு கீழே வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இந்த 21 மாதங்களில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்காத அரசாக, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் அரசாகத்தான் இப்போதைய அரசு இருந்து வருகிறது. இதனால் இந்த அரசு மீது மக்கள் மிகவும் கொந்தளிப்போடு இருக்கிறார்கள்.
கருணாநிதிக்காக நினைவிடம் கட்டியது. நூலகம் கட்டியது போதாதென்று தற்போது, 80 கோடியை செலவு செய்து பேனா நினைவு சின்னம் கட்டுவதற்கான முயற்சிகளில் திமுக அரசு இறங்கியுள்ளது. எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்று தான். அந்த தொகையில் மாணவர்களுக்கு பேனா வாங்கி கொடுக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு குற்றங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. மாணவர்கள் ஒருபுறம் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்த்தப்பட்ட பால் விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை குறித்து திமுக கூட்டணி கட்சிகள், எதுவுமே பேசுவது இல்லை. அதற்காக குரல் கொடுப்பதும் இல்லை. ஏனென்றால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என காட்டமாக விமர்சனம் செய்தார்.
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கபப்ட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்ட போது ஹெக்டேருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தார். ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகை கூட அவர் அறிவிக்கவில்லை. இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது இருக்கக்கூடாது என கூறிய அவர், ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.
ஈரோடு நகராட்சி பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தி முடித்த பிறகும் கூட முழுமையான குடிநீர் கொடுக்காத அரசாக திமுக அரசு உள்ளது. இலவச வேட்டி சேலை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக இருந்து, அவர்களை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலில் பாஜக எங்களோடு கூட்டணியில் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக நேற்றை தேர்தல் பிரச்சாரத்தில் எங்களோடு இணைந்து அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். ஈரோடு தேர்தலில் நிச்சயம் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா