”உழவர்களுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா இன்று துவங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த கண்காட்சியில் வேளாண் உற்பத்தியாளர்களின் பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கான இயந்திரங்கள், உற்பத்தியாளர் – கொள்முதலாளர் சந்திப்புகளும் நடைபெற்றன. இந்த விழாவில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேளாண் வணிகத் திருவிழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
”வேளாண் துறை வளர்ச்சி மக்களின் வாழ்வோடு தொடர்புடையது. ஆட்சியாளர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டுமானால் உழவர்கள் உரிய மாரியாதையும், சிறப்பையும் பெற்றாக வேண்டும்.
தற்போதை ஆளும் அரசின் மூலம் உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறோம். உழவு தொழிலை முதன்மையான துறையாக நினைப்பதனால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளார்கள். உணவு தானிய உற்பத்தியில் மகத்தான சாதனை செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளை விட அதிக விழுக்காட்டில் உற்பத்தி அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை அக்கறையுடன் கவனித்தோம். தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக இன்னும் மாறவில்லை. பாசனப்பரப்பு அதிகமாக வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும்.
உழவர்களுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. உழவர்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து தலைநகரில் போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் திமுக அரசு உழவர்களின் நண்பனாக இருக்கும். வேளாண் குறித்த அறிவினை அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். மண்ணை காப்போம், மக்களை காப்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







