“அமைச்சர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழங்கி உள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி,

“அமைச்சர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும், லஞ்சம் லாவண்யம் கட்டாயம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமைச்சர்கள் துறை ரீதியாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் நான் அளிக்கவில்லை. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் மட்டுமே தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சவை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம். தவறு செய்யவும் கூடாது. அவ்வாறு தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமைச்சர்கள் கீழ் பணியாற்றக் கூடியவர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். Clean Government ஆக பணியாற்றுவதே இலக்கு. பெயர் அளவில் திட்டங்கள் இருக்க கூடாது, நாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டும். திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.