வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக நிலவியதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மிகக் கன மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பெரம்பலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







