தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், கார் / குறுவை சொர்ணவாரிப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.48 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நாகப்பட்டினம், தஞ்சாவூர். திருவாரூர். மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி). அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது. எனவே, இன்று (ஜூன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.
இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும். டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 இலட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார் / குறுவை /சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும். நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்கள்.
இதன்படி, வடிமுனைக் மாவட்டங்களில் குறுவை குழாய்களைக் கொண்டு டெல்டா சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




