புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தை புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு கூட்டினர். இதில், கட்சி தலைவர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த செயற்குழு கூட்டத்தில், ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தும், முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி என்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும், ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் பாஜக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, “தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்.ஆர்.ரங்கசாமி தலைமை ஏற்பார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.