‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு இன்று பிற்பகல் வந்துசேர்ந்தார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவர் சூலூரிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பல்லடம் சென்றார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்ட மேடைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரதமர் மோடியை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, இரு புறமும் கூடிநின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுக்கூட்ட மேடையில் சிறப்புரையாற்ற உள்ள பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லவுள்ளார். அங்கு உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கியிருந்து நாளை (பிப். 28) தூத்துக்குடி சென்று நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.







