பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள், கரும்பு, என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 3ம் தேதி முதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த பரிசு தொகுப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், இதில் மோசடி நடந்திருக்கிறது எனவும் அதிமுக குர்றச்சாட்டை வைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் காவல் துறையினரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பொருட்களின் எடை குறைவாக இருந்ததாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில் 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் இன்பத்துரை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.