4வது டி20 போட்டி | இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

4வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீராங்கனைளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 80 ரன்களிலும், ஷபாலி வர்மா 79 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 40 ரன்களுடனும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் ஹாசினி பெரேரா மற்றும் கேப்டன் அத்தபத்து ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹாசினி பெரேரா 33 ரன்களிலும், அத்தபத்து 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.