சென்னை விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய்!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு  ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணி அளவில் சென்னை திரும்பினார். அவிமான நிலையத்தில் விஜயை பார்ப்பதற்காக ரசிகர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் குவிந்திருந்தனர்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜயை பார்ப்பதற்காக தாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காருக்குள் ஏறச்சென்ற விஜய், நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.