ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2017ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்த வழக்கின் முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
எனவே, தலைச்சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.







