பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பல்லாவரம்…

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மெர்லினா. இவர்கள் வீட்டில் பட்டியலின இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணை திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் மெர்லினா மற்றும் ஆண்டோ மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தலைமறைவானதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிபதி குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு  ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.