மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் ஆலய மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை தஞ்சை கோட்டாச்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக உறுதி மொழியினை ஏற்று கொண்ட காளையர்களுக்கும், காளைக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது மாடுபிடி குழுவும் பங்கேற்றனர். ஒவ்வொரு
காளைக்கும், ஒன்பது வீரர்கள் வீதம் 25 நிமிடங்கள் போட்டி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் வெற்றி பெற்ற காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் குக்கர், அயன்பாக்ஸ், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியினை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரம் பொற்பனை முனீஸ்வரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு 55-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறி பாய்ந்த காளைகளை அடக்கினர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
- பி.ஜேம்ஸ் லிசா