ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச தூதராக ஐசிசி நியமனம் செய்துள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் ஐசிசி நிறுவனம் ஒரு அசத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுலகரை சர்வதேச தூதராக ஐசிசி நியமனம் செய்து அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ”1987-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பால் பாய் ஆக பணியாற்றியதில் இருந்து உலகக்கோப்பைத் தொடரில் 6 முறை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகக் கோப்பைகள் என் இதயத்தில் எப்போதும் தனி இடத்தைப் பிடித்துள்ளன. 2011ல் உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமையான தருணம். இந்தியாவில் 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பல சிறப்பு அணிகள் மற்றும் வீரர்கள் கடுமையாகப் போட்டியிட உள்ளதால், இந்த அற்புதமான போட்டியை நான் உற்சாகமாக எதிர்நோக்குகிறேன்” என கூறியுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பைக்கான சர்வதேச தூதர்களாக இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.