தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அலுவலகத்தில் கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அலுவலகத்தில் கொரோனா பரவல் குறித்து
செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது..

” ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பே இல்லாத நிலை இருந்த சூழல் இருந்தது, உயிரிழப்பு இல்லாத நிலை இருந்தது. தற்போது உருமாற்றம் கொண்ட கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்தியாவில் 200-க்கும்கீழ் இருந்த கொரோனா பாதிப்பு 1000-த்தை கடந்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை சோதித்ததில் பாதிப்பு எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே H3N2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்தது.
முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 1586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு
சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.

கடந்த 10 நாட்களில் 23,833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களில் 10 லட்சத்து
41 ஆயிரம் பேர் பங்கேற்றதில் 7500 பேர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. H3N2 வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்துள்ளது, தற்போது 15 பேர் மட்டுமே பாதித்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை
உறுதிப்படுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசு
அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்
காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் தொற்று
பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை. கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது, பொதுமக்கள்
பதற்றப்பட தேவையில்லை.

மேலும், 2000 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக்கொள்ளும்
அளவிற்கு தமிழ்நாட்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகள், மருந்து,
ஆக்ஸிஜன் போன்றவை சரியாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நோய் எதிர்ப்புசக்தி தன்மை குறித்து தமிழ்நாடு முழுவதும் நோய்
எதிர்ப்பு சக்தி ஆய்வு நடத்தப்படும்.

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்
என்பதால் நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஊரடங்கு போட
வேண்டிய நிலை இல்லை என்றும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என
வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கூடுதலாக 40 மதிப்பெண்கள்
வழங்கப்பட்டுள்ளது. தற்போது 30 மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது
மீதமுள்ள 8 மாவட்டங்களிலும் விரைவில் பணி நியமனம் முடிக்கப்படும்”  என
அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.