அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய புதிய கால்பந்தாட்ட மைதானத்தை இன்று திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு புதிய விளையாட்டு உபகாரங்களை வழங்கினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி ஒன்றையும் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத்தொடர்ந்து, ஜவகர் நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு இலவச கண் மருத்துவமனையினை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, பல்வேறு அரசு கட்டிடங்களின் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மக்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் புதிய எழுச்சி, புத்துணர்ச்சி பெறுகிறேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொளத்தூர் தொகுதியில் 1896 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மனுக்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டது.
சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, எங்களுக்காக வாக்களித்த மக்கள் சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லும் வகையில் பணியாற்றுவோம் என்று கூறியிருந்தேன். அதே போல், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் எங்கள் பணி அமையும் என்று நான் தெரிவித்தேன். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியுமா என பலர் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலை மிக மோசமாக இருந்ததால், எனக்கே சிறிது அச்சம் ஏற்பட்டது. ஆனால் நிதி நிலைமையை சரிசெய்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நிறைவேற்றினோம். அதிலும் குறிப்பாக, அறிவித்ததற்கு முந்தைய நாளே பெண்களின் கணக்கில் ரூ.1000 செலுத்தினோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தனது தொகுதியில் 3 முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே நன்றி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கட்சி பாகுபாடு, அரசியல் பாகுபாடு இன்றி அனைவருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.” எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.