தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்… ராகுல் காந்தி மீது பாஜக புகார்!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார்…

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (மார்ச் 31) டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருகிறார்.  ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது. காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை” என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் என ராகுல் காந்தி கூறிய கருத்தால் பாஜக அதிருப்தி அடைந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் குமார் ஆகியோர் அடங்கிய அக்கட்சியினர், ராகுல் காந்தி மீது இன்று (ஏப். 1) டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “நேற்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை மேட்ச் பிக்ஸிங் என கூறினார். மத்திய அரசு தனது ஆட்களை தேர்தல் ஆணையத்துக்குள் அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, ராகுல் காந்தி மற்றும், இதர காங்கிரஸ் தலைவர்கள், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.