தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து கடந்த 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த கொடுத்த உரையில் சில பகுதிகளை தவிர்த்ததுடன் தமிழ்நாடு அரசு என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. பின்னர், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று சந்திக்கச் சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 11.30 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்லவுள்ளதாகவும், அங்கு, சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து விளக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.