2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதம் என்பவரின் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி, மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது. போடாத சாலைகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பதுதான் ஒரு கட்சியின் மாண்பு. ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக திமுக பேசிவருகிறது. திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும், பொதுமக்கள், வருகிற நாடாளுமன்ற தேர்தலில்
பாடம் புகட்டி திமுகவை தோல்வியடையச் செய்வார்கள்.
2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் இருந்த அதிகாரத்தையும், பணத்தையும் நம்பிதான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அதிமுக, நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ்,
இபிஎஸ்தான் காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா மௌனம் காப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.







