வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு வந்த மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு தாயான சுதா ஷர்மா என்பவரின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். தற்போது முதுகலைப் பட்டதாரிப் பெண்ணான இவர், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தம்முடைய வளர்ப்புத் தாய் தன்னை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த மனுவில், தம்முடைய வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்தரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர். அவர் தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஏற்கெனவே மாந்தரீகம் மூலம் தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் நரபலி கொடுத்துவிட்டார்.
இந்த நிலையில் என்னையும் நரபலி கொடுக்க முயற்சி செய்து வருகிறார். எனவே நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17-ம் தேதி சென்னைக்கு வந்ததாகவும், தற்போது குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் செல்ல முயற்சித்து வருவதாகவும், அப்படி தன்னை போபாலுக்கு அழைத்துச் சென்று விட்டால், அங்கு வைத்து தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனபதால், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக என்று போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்துள்ளதாக மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில்
ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து ஆஜரான மனுதாரரான ஷாலினி தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இருதரப்பு வாதங்களும் ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசேகரன் இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பதால் இங்கு வந்ததாக ஷாலினி சர்மா கூறியிருக்கிறார்.
இளம்பெண் ஷாலினி ஷர்மாவின் வழக்கு குறித்து அவரது பெற்றோர் 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வளர்ப்புத் தாய் மீது பெண் அளித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய பிரதேச மாநிலம், போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா