ராஜ்ய சபா சீட் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் ஒற்றைக் காலில் நிற்பதாக தெரிகிறது. இவர்களை பின்னால் இருந்து எடப்பாடி பழனிசாமி இயக்குகிறாரோ என்ற சந்தேகம் ஓபிஎஸிற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, ஜூன் 10ம் தேதி 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு 3 இடங்களில் திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது. ஒன்றை காங்கிரசிற்கு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இரண்டு இடங்களை பெறுவதற்கு இரண்டு டஜனுக்கும் அதிகமானவர்கள் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செம்மலை, கோகுல இந்திரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெசிடி பிரபாகர், இன்பத்துரை என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை பொறுத்தவரை தங்களது ஆதரவு பெற்ற வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என தீர்க்கமாக இருந்தனர். வழக்கம்போல் முஷ்டியை உயர்த்தும் ஓபிஎஸை மூத்த நிர்வாகிகளை வைத்து சரிகட்டி விட்டு தங்களுக்கு வேண்டிய இருவரை வேட்பாளராக அறிவித்துவிடலாம் என எடப்பாடி கருதியதாக தெரிகிறது. இதற்கு ஒத்துழைக்காத ஓபிஎஸ் இந்த முறை இரண்டில் ஒரு வேட்பாளர் தனது ஆதரவாளராக இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த ஒருவரை ராஜ்யசபாவிற்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை சமாளிக்க ஈபிஎஸ் கையில் எடுத்த ஆயுதமே முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் நிறுத்தலாம். இவர்கள் இருவருமே எந்த காலத்திலும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் என ஈபிஎஸ் மன கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால் உட்கட்சியில் மனகசப்பு அதிகரிக்கும் என ஓபிஎஸை ஈபிஎஸ் தரப்பினர் சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதில் ஓபிஎஸிற்கு விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஜெயக்குமாரும், சிவி சண்முகமும் தங்களுக்குதான் இந்த சீட்டை ஒதுக்க வேண்டும் என விடாப்படியாக நிற்பதாக தெரிகிறது. எனவே இவர்களை இருவரும்தான் வேட்பாளர் என்ற அறிவிப்பு மாலை வெளியாககூடும். ஒருவேளை ஓபிஎஸ் கடுமையான அழுத்தம் கொடுத்தால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கோ, அல்லது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கோ சீட் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆர்.விக்னேஷ்