தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தற்காலிக சபாநாயகரின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விசிக, IUML ஆகிய கட்சிகளும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், முதலமைச்சராக விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன.

இந்த விழாவில் பங்கேற்க சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. மேலும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விஜயின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து விழாவிற்கு வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அவருடன் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில், 200 யூனிட் மின்சாரம், சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு, மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு மேடையில் பேசினார்.

இதனை தொடர்ந்து பதவியேற்ற பின் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார். முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது அவருக்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகரின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.
நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.