அமமுக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியபடி சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உள்ஒதுக்கீடு வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில், அமமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரனை ஆதரித்து, டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய டிடிவி தினகரன், அமமுக சாதி மத வேறுபாடின்றி கூட்டணி அமைத்துள்ளது என்றும், ஆனால் 69 சதவீத இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு என்ற பெயரில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் விதமாக, தேர்தலுக்காக நாடகம் நடத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
அமமுக ஒவ்வொரு மாவட்டத்திலும், தொழிற்பேட்டைகளை உருவாக்கி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்றும், டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை, பெண்களுக்கென பள்ளி என உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும், அமமுக நிறைவேற்றும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.







