தமிழக துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உயர் பதவியிலிருந்தும் தான் வெற்றிபெற்ற போடிநாயக்கனூர் தொகுதிக்கு இதுவரை எந்த நல்லத் திட்டங்களையும் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக போடிநாயக்கனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து போடிநாயக்கனூர் தொகுதியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும். நான் தமிழக அரசியல் களத்தில் கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறேன். மறைந்த கலைஞர் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக 13 வயதில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் நானும் என்னுடைய 14 வயதில் கோபாலபுரம் பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போதிலிருந்தே திமுகவில் ஒவ்வொரு பதவிகளிலும் இருந்து தற்போது கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
அதிமுக கூட்டணிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயத்தால் ஆத்திரத்தின் உச்சாணிக்கே முதல்வர் பழனிசாமி சென்றுவிட்டார். அவருக்கு தற்போதெல்லாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை. போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்த முதல்வர் பழனிசாமி அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்றார். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் யார்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற கூட்டத்தில் யார் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தது. அதிமுகவை சேர்ந்த 11 பேர்தான் அவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். அப்போது இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கபோவது அதிமுகவினர்தானே.
போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை வெற்றிபெற்றபோதும் அவர் இந்த தொகுதிக்காக எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. அவருடைய தியாக நாடகம் எல்லாம் பதவிக்காகத்தான் நடத்தினார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதற்காக அல்ல” என ஸ்டாலின் கூறினார்.