திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரிடம் கடை வாடகைக்கு எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். இந்த கடை தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவிக்கும், ராமுவுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகவும், அதனால் இருதரப்பினருக்கிடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில், கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். என் மனைவி மீது வேண்டுமென்றே ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்று அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மறுத்த்துவமணிக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன் ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது. அவர் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் பிரபாகரன் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்திருக்கிறேன் என்பது நாளை தெரியவரும்.எல்லாம் முடிந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரக் ஆக போகுதுபோலீசாரிடம் ஒன்னுக்கு இரண்டாக சொல்லுங்கள். தனது வீடியோவை 6 கோடிக்கு மேல் பார்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் வீடியோ அனுப்பியுள்ளேன். போலீசாரிடம் பேசும் போது ஸ்ட்ரைக் பண்ண 10 ஆள்களை ரெடி பண்ணுக. கத்தியால் குத்தவே இல்லை என பொய் செல்லுங்க. இனிமேல் கடை கொடுத்தாலும் வேணாம். மானம் தான் முக்கியம் என்னிடம் நிறைய அரசியல் பிரமுகர்கள் பேசினர். திருவண்ணாமலையில் இன்று இரவுக்குள் அனைவரையும் தூக்குறோம். நான் பேசியதை யாரிடம் சொல்ல வேண்டாம். அவர்களை போலீசார் தூக்கி சென்று அடிக்கட்டும் என அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா