உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா
தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய
சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி 25-தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும்
மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா
வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்க சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8-ம்திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோளத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி
மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து
சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல்
குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இதனையும் படியுங்கள்: விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்பு
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில்
நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து
இழுத்துச் சென்றனர்.
இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. இந்த பெரிய தேரை மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது.
தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி
வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.







