விசிக தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
விசிக்காக ஒதுக்கப்பட்ட எட்டு தொகுதிகளை இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அடையாளம் கண்டு, தொகுதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம். அதிகாரப்பூர் அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிடுவார். பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது.
நாங்கள் விரும்பிய தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளோம். என்னென்ன தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக நாளை தெரியவரும். இன்னும் ஓரிரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தக் கட்சிகளின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றால் உடனடியாக வேட்பாளர் பட்டியலும் தொகுதிகளும் அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணியில் எதுவும் பிரச்சனை ஏற்படாதா என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் மீண்டும் ஏமாறப் போகிறார்கள். எதிர்க்கட்சி கூறுவது போல் இழுபறி ஏதுமில்லை. 10 கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கும் பொழுது தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதனால் தாமதம் ஏற்படுகிறது. அதனை இழுபறி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
குறைந்த தொகுதி கொடுப்பது குறித்து எங்களுடைய கட்சியினர் தான் கவலைப்பட வேண்டியதே தவிர , வேறு யாரும் நினைக்க வேண்டாம். தமிழகத்திற்கு வழங்கியுள்ள பானை சின்னத்தை புதுச்சேரியும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.







